விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் சீசன் 6' டைட்டில் வின்னரான நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷூக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் டி.இமான்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது விஜய் டிவியின் ’சூப்பர் சிங்கர் சீசன் 6’. இப்போட்டியில் நாட்டுப்புற இசைக்கலைஞரான செந்தில் கணேஷ், டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார். இதை இசை ரசிகர்கள், ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர்.
எல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில், ’சீசன் 6’ நிகழ்ச்சியில் வெற்றிபெறுபவருக்கு, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷூக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து எப்போது அழைப்பு வருமென எல்லோரும் ஆவலாக காத்திருக்கும் போது, இசையமைப்பாளர் டி.இமான் முந்திக் கொண்டார்!
பொன்ராம் இயக்கத்தில், சிவக்கார்த்திகேயன் நடிக்கும் ’சீமராஜா’ படத்தில் அட்டகாசமான ஒரு கிராமிய பாடலை, செந்தில் கணேஷைப் பாட வைக்க போகிறார் டி.இமான்! இதை, டி.இமான் தனது ட்விட்டரில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.