பல்வேறு போர்களின் போது, அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்து வந்த பாகிஸ்தானை, அந்நாடு ஒதுக்குவதாகவும், இனிமேலும், அமெரிக்காவின் அடியாள் போல பாகிஸ்தான் செயல்படாது என்றும், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடுகளுள் ஒன்றான பாகிஸ்தானை, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கடுமையாக விமர்சித்து வந்தார். தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அந்நாட்டிற்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை நிறுத்தவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவுடனான உறவு குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "பாகிஸ்தானை ஒரு அடியாள் போல பயன்படுத்தும் ஒரு உறவில் நாங்கள் இருக்க மாட்டோம். பணம் கொடுத்து வேறொருவர் நடத்தும் போரில் இனிமேலும் எங்களை ஈடுபடுத்த முடியாது" என கூறினார்.
"சீனாவுடனான உறவு வர்த்தக ரீதியானது. அதுபோன்ற உறவையே அமெரிக்காவுடனும் மேற்கொள்ள ஆசைப்படுகிறோம். பாகிஸ்தான் சீனாவின் பக்கம் செல்லவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தான் எங்களை ஒதுக்கி தள்ளுகிறது" என்றார்.
newstm.in