சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து தனது படை அணிகளைச் சேர்ந்த வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெற்று வருகிறது.
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் இரண்டாயிரம் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டனர். அந்த நாட்டில் இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் :சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் நடைபெற்ற அந்த இயக்கதினருடனான போர்கள் பலவற்றில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளோம். எனவே அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும்" அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடைபெற்று வரும் சிரியாவில் இருந்து தனது படை அணியினரை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பெண்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in