40வது யுனெஸ்கோ மாநாடு : பயங்கரவாதத்தின் டி.என்.ஏவாக செயல்படும் பாகிஸ்தான், அனைத்து வகையிலும் ஓர் தோல்வியுற்ற நாடாகவே கருதப்படும் என்று பாகிஸ்தானை வெகுவாக தாக்கியுள்ளார் இந்தியாவின் பிரிதிநிதியான அனன்யா அகர்வால்.
பாரிஸில் நடைபெறும் 40வது யுனெஸ்கோ மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் கல்வி அமைச்சர் ஷப்கட் மஹ்மூத், அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, யுனெஸ்கோவின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இவரை தொடர்ந்து, இவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய பிரிதிநிதி அனன்யா அகர்வால், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஓர் குற்றவாளியாக தோற்றுவிக்கவே பாகிஸ்தான் முயல்வதாக கூறினார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும், அயோத்தியா வழக்கின் தீர்ப்பிலும் தேவையில்லாமல் தலையிட்டு வரும் பாகிஸ்தான், தங்களது நாடு தான் பயங்கரவாதத்திற்கான டி.என்.ஏவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கிளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, மனித உரிமை அத்துமீறல்கள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவது, தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவது என அனைத்து வகையான மனித உரிமைகளுக்கு எதிரான காரியங்களிலும் ஈடுபடுவதினால் தான் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான பலவீனமான நாடுகளின் பட்டியலில் 14வது இடம் பெற்றிருந்தது பாகிஸ்தான் என்று பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக தனது பலமான கருத்துக்களை முன்வைத்துள்ளார் அனன்யா அகர்வால்.
மேலும், சர்வதேச நாடுகள் யார் யாரை பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துகிறதோ அவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் ஹீரோக்களாகவே திகழ்கின்றனர் என்று குறிப்பிட்ட அனன்யா, சமீபத்தில் அந்நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெனரல் முஷரஃப், ஒசாம் பின்லாடன் மற்றும் ஹக்கானி போன்ற பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியுள்ளார்.
இறுதியாக, இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் கருத்துக்களை சர்வதேச நாடுகள் ஏற்க வேண்டாம் என்ற கோரிக்கை விடுத்ததோடு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்காக உலக நாடுகளுக்கு அழைப்பையும் விடுத்துள்ளார் அனன்யா அகர்வால்.
Newstm.in