உடனடி முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக்கும் மசோதாவை இந்த பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
நாட்டில் பல இடங்களில் இஸ்லாமிய சட்டத்தில் உள்ள முத்தலாக் முறையை இஸ்லாமியர்கள் தவறாக பயன்படுத்தி விவாகரத்து செய்கின்றனர். பல இஸ்லாமியர்கள், தலாக் விதிகளை மதிக்காமல், உடனடியாக மூன்றுமுறை தலாக் கூறி, விவாகரத்து செய்து வந்தனர். தொலைபேசி மூலம் தலாக், செய்தித்தாள் விளம்பரம் மூலம் தலாக் என பல்வேறு சம்பவங்கள் பெண்கள் அமைப்புகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து, முத்தலாக் முறையை முற்றிலும் தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பாரதிய ஜனதா மற்றும் கூட்டணியின் பெரும்பான்மையை கொண்டு இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.
வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் குமார் கூறினார். பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பட்ஜெட் கூட்டதொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் குமார் இவ்வாறு கூறினார்.
முத்தலாக் மசோதாவோடு, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகள் எடுக்கும் என தெரிகிறது.