டெல்லியில் போராட்டம் செய்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் தனது அமைச்சர்களுடன் கடந்த ஒரு வார காலமாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
கேஜ்ரிவாலின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் பதிவு செய்த ட்வீட்: "அந்த நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். உங்களை சுற்றி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள். இதை படித்தபின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம்" என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.