தனக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார் என்றும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஒரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அங்கு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மகனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூட தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
இதுகுறித்து பேசி உள்ள அந்த மாநில முதல்வர் சவுகான், "எனக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் நீங்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளீர்கள் ராகுல் காந்தி. நீங்கள் கூறிய இந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடர உள்ளேன். சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச மாநில பா.ஜ.க தரப்பு, ‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராகுல் காந்தி குற்றம் செய்துள்ளார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவு செய்யும்' என்று கூறியுள்ளது. வரும் நவம்பர் 28ம் தேதி, மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
newstm.in