தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் எனவும் இருந்தாலும் அவர் கேப்டனாக இன்னும் முன்னேற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20ல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "இந்திய அணிக்கா தோனி செய்ததை எல்லாம் வேறு யாரும் செய்யவில்லை. அவர் எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை. அவர் விரும்பும் போதுஅந்த முடிவை எடுத்துக்கொள்வது தான் சரி. 2019 ஆண்டு தோனி அணியில் இருப்பது அணிக்கு நல்ல வாய்ப்புகளை அளிக்கும்.
ஒரு வீரராக எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆதரிக்கும் வீரர் விராட் கோலிதான். ஆனால் தலைமை பொறுப்பில் அவர் இன்னும் முன்னேற வேண்டும், நிறைய வேலைகள் அதில் கோலி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் என்னைப்பொறுத்தவரையில் கேப்டனாக தோனிதான் சிறந்தவர்.
ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டுமெனில் இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் பேட்டிங்கை இன்னும் சிறப்பாக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய பிட்ச்கள் முன்பு போல் இல்லை, பவுன்ஸ் அதிகமானால் எளிதில் ரன் அடிக்கலாம். எனவே நன்றாக பேட் செய்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடர் ஆஷஸ் தொடரை விட பெரிதானது" என்றார்.
newstm.in