ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த பெண்களுக்கான 25மீ பிஸ்டல் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய துப்பாக்கி சுடு வீராங்கனை ஹீனா சித்து, 38 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் ஹீனா பெறும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். தவிர இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 11-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் எலெனா, 35 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், மலேசியாவின் அலியா சாசன 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.
குத்துச்சண்டையில், 91 கிலோ எடை பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், பிராங்க் மஸோயாவை இந்திய வீரர் நமன் தன்வர் எதிர்கொண்டார். இப்போட்டியில் தன்வர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அமித் ஃபங்கலும், அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.