சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக மீண்டும் ஷஷாங்க் மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டு போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் ஷஷாங்க் மனோகர். பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய இவரை, இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தது ஐசிசி. இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு பாதியில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக மனோகர் அறிவித்தார். அந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஐசிசி கூட்டம் வரை அவர் தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் மற்றும் பகிர்வு தொடர்பான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்ததால், மனோகர் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினர்.
இதனால் மனோகர் தனது பதவிக்காலம் முடியும் வரை தலைவராக நீடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது ஐசிசி இணையதள பக்கத்தில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஷஷாங்க் மனோகர் தலைவராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.