சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் தண்ணீர் கேட்டு, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோனாம்பட்டி காட்டுவளவு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குடிநீருக்கு மட்டுமில்லாமல் அன்றாட பயன்பாட்டுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு முறையான தண்ணீர் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, பின்னர் கலைந்து சென்றனர்.