சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான ஏற்காடு ஏரியில் விசைப்படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
குறிப்பாக விடுமுறை தினங்களில் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இங்கு சுற்றுலாத்துறை சார்பில் 5 விசைப்படகுகள், 5 துடுப்பு படகுகள், 60 மிதிப்படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஏற்காடு ஏரி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமானது. ஊராட்சி ஒன்றியம் சார்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைத்து ஏற்காடு டவுன், லாங்கில்பேட்டை, ஜெரினாகாடு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதனால் இங்கிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாகவும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு படகு இல்லத்தில் விசைப் படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டார். அதன்படி விசைப்படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மிதி படகு, துடுப்பு படகு சவாரி வழக்கம் போல இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியில் நீர்மட்டம் உயரும் வரை விசைப்படகு சவாரிக்கான தடை நீடிக்கும் என தெரிகிறது.
newstm.in