ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை தமிழக அரசு ஆணையாக பிறப்பித்தது. அதன்படி அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருசில பகுதிகளில் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க இன்று தமிழக அமைச்சரவை கூட உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டமானது இன்று காலை நடைபெற இருக்கிறது.
ஜனவரி மாதம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருக்கும் நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
newstm.in