வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க தீவிர பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு தேர்தல் குழுக்களை அமைத்துள்ளது. கடந்த வாரம் அதிரடியாக கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசர் தலைமையிலும் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள கே.எஸ் அழகிரி மாநில தேர்தல் குழுவின் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ப.சிதம்பரம், ராமசாமி திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர், கே.வி.தங்கபாலு, செல்வகுமார், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், குஷ்பூ உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரச்சார குழுவின் தலைவராக திருநாவுக்கரசர், விளம்பர குழுவின் தலைவராக கே.வி.தங்கபாலு, ஊடக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ், தேர்தல் மேலாண்மை குழுவின் தலைவராக கே.ஆர் ராமசாமி என பல முக்கிய புள்ளிகளுக்கு தலைமைப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
newstm.in